வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர் சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள்.
“பறவைகளுக்கு தங்களை வரவேற்கும் சுவரொட்டிகளைப் படிக்கத்தெரியாது. ஆனால், பறவை இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த சுவரொட்டிகள் மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதால் இப்படி ஒட்டி வருகிறோம்,” என்று பறவை ஆர்வலர்கள் கூறினர்.
அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பறவைகள் வலசை போகும் காலம்.
அக்டோபர் மாதம் இன்னும் ஒரு சில தினங்களில் வர உள்ளதால், இரைதேடி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பறவை இனங்களை வரவேற்கவே இப்படி சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர் பறவை ஆர்வலர்கள்.
“மண்கொத்தி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளிலிருந்து வலசை வருகின்றன. அவ்வாறு வரும் பறவை இனங்களைப் பொதுமக்கள் இடையூறு செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களது இந்த சுவரொட்டி நடவடிக்கையின் நோக்கமாகும்,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரைதேடி வரும் இந்த பறவை இனங்கள் இங்கு இனப்பெருக்கம் செய்யாமல், விவசாயத்திற்கு ஊறு விளைவிக்கும் பூச்சி, புழுக்களைச் சாப்பிட்டு பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தங்களின் இருப்பிடத்துக்கு திரும்புவதாகவும் பறவை ஆர்வலர்கள் கூறினர்.