மதுரை: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் 1,000 ஆண்டுகால வரலாற்றைத் தெரிவிக்கும் வகையிலான 410 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
திரு சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் கடந்த ஓராண்டாக இந்த அம்மன் கோவிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து வந்தனர். அதனை ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ள திரு சாந்தலிங்கம், இப்புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்றார். ஆய்வு குறித்து திரு சாந்தலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மீனாட்சி அம்மன் கோவிலில் கிடைத்துள்ள 410 கல்வெட்டுகள் பற்றி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் 79 கல்வெட்டுகள் முழுமையாக உள்ளன. மீதமுள்ள 301 கல்வெட்டுகள் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்து துண்டுக் கல்வெட்டுகளாக உள்ளன.
“இவை அனைத்தும் தமிழ் கல்வெட்டுகளாகவும் அதில் ஒன்று சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாகவும் உள்ளன. இதுதவிர, கம்பத்தடி மண்டபம் கட்டப்பட்ட செய்தி பற்றிய கல்வெட்டு மட்டும் தெலுங்கிலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.
“அனைத்துக் கல்வெட்டுகளும் சுவாமி சன்னதி பிரகாரம், கோபுரங்கள், மண்டபங்களில் காணப்படுகின்றன. முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1190-1216) கால கல்வெட்டுதான் கோவிலின் முதலாவது கல்வெட்டு.
“அதைத்தொடர்ந்து வந்த பாண்டிய மன்னர், விஜயநகர அரசர் கிருஷ்ண தேவராயர், மல்லிகார்ச்சுனர், திம்மராயர் கல்வெட்டுகளும் நாயக்கர் காலத்தில் வீரப்ப நாயக்கர், திருமலைநாயக்கர், விசயரங்கசொக்கநாதர் ஆகியோரின் கல்வெட்டுகளும் உள்ளன.
“சங்ககாலத்தில் இக்கோவில் மிக எளிமையாக செங்கல் உள்ளிட்ட பொருட்களால் சிறியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும்.
“அதன்பின்பு கி.பி.13ஆம் நூற்றாண்டில்தான் கோவில் கல் கட்டடமாக கட்டப்பட்டதும் பாண்டிய மன்னர்கள் அதற்கு உதவியதும் தெரியவருகிறது. எனவே, பாண்டிய மன்னர்கள் கோவில் கட்டியதும் திருவிழாக்கள் நடத்தியதற்காக நிலங்கள் கொடுக்கப்பட்டதற்கான முழுமையான விவரங்கள் இந்தக் கல்வெட்டில் உள்ளன.
“கோவில் உருவானது முதல் சுவாமியின் பெயர் திரு ஆலவாய் உடைய நாயனார், நம்பி சொக்கர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
“மீனாட்சி சுந்தரேசுவரர் பெயர் 1898ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் வந்துள்ளது. ஏறக்குறைய 1,000 ஆண்டுகள் தாண்டிய கல்வெட்டுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.