மதுரை: கீழடி அகழாய்வின் நடவடிக்கையின் அண்மைய கண்டுபிடிப்பான 25 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு (படம்)அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த உறைகிணறானது சுமார் 80 செ.மீ. விட்டமும் 380 செ.மீ உயரமும் கொண்டதாகவும் உள்ளது.
தமிழகத்தின் கீழடி பகுதியில் நீடித்து வரும் அகழாய்வு நடவடிக்கையின் போது தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் ஏராளமான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆறாம் கட்ட அகழாய்வில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறுதான் மிகப்பெரியது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உறைகிணறு அகரம் பகுதியில் கிடைத்துள்ளது.
தற்போது கீழடி தவிர கொந்தகை, மணலூர், அகரம் என நான்கு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது மேலும் பல பொருள்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் இப்போது நடைபெற்று வரும் ஆறாம் கட்ட ஆய்வுக்கு அரசு உரிய நிதியை ஒதுக்கி, இப்பணி மேலும் சில மாதங்கள் நீடிக்க வழிவகுக்க வேண்டும் என்றும் பலரும் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஒவ்வோர் இடத்திலும் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன. இம்மாதம் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெறுகிறது. இதனால் தமிழக தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளையும் பொருள்களையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.