சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வரும் துணை முதல்வரும் வந்தபோது அவர்களது ஆதரவாளர்கள் தனித் தனியே ஆதரவு பதாகைகளை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்ததால் சற்றே குழப்பம் நிலவியது.
ஒருபக்கத்தில் பழனிசாமிதான் அடுத்த முதல்வர் என்றும் மறு பக்கத்தில் ஓ பன்னீர்செல்வம்தான் அடுத்த முதல்வர் என்றும் அவர் களது ஆதரவாளர்கள் முழங்கினர். இந்தப் பரபரப்பான சூழலுக்கு இடையே நடைெபற்ற செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரு மொழிக்கொள்கை, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும், ஜிஎஸ்டி தொகையை வழங்கவேண்டும், கலாசார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், கச்சத் தீவு மீட்பு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு உள்ளிட்ட மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. அத்துடன், கொரோனா தடுப்புப் பணிகள், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியைத் தமிழகத் துக்கு மத்திய அரசு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் ஒருமித்த சிந்தனையோடு ஒன்றிணைந்து செயல்பட்டு, மீண்டும் ஆட்சி மலர்ந்திட உழைப்போம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, “2021ல் மீண்டும் முதல்வர்-சாமானியர்களின் முதல்வர் இபிஎஸ்,” என்ற வாசகத்துடனான பதாகைகளை அவரது ஆதரவாளர்கள் ஏந்தி நின்றனர்.
“2021ஆம் ஆண்டில் மீண்டும் முதல்வர் எடப்பாடியார்தான்,” என்கிற பதாகையை இபிஎஸ் ஆதரவாளர்கள் பிடித்துக்கொண்டு “இபிஎஸ்தான் மீண்டும் முதல்வர்,” என முழக்கமிட்டனர்.
“மும்முறை முதல்வரே! அம்மாவின் வாரிசே!” என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழங்கினர்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆரத்தி எடுத்து, ஆளுயர மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையுடன் அவரது தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
ஓபிஎஸ் படத்தை முகமூடியாக அணிந்த படி அவரது ஆதர வாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் எதிரில் திரண்டனர்.