தமிழகத்தை ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் போட்டி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கிறார். இவருக்கு எதிராக தற்போதைய துணை முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் அக்கட்சியில் முதல்வர் வேட்பாளர் பிரச்சினை சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது ‘எடப்பாடியார்தான் எப்போதும் முதல்வர்’ என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ‘மும்முறை அம்மாவின் வாரிசே ஓபிஎஸ்தான் முதல்வர்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர்களும் முழக்கமிட்டனர்.
செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே முதல்வர் விவகாரம் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, அதிமுக கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் தனது கரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கட்சியில் தமக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை தனது இல்லத்துக்கு வரவழைத்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதில் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி நடத்தும் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றும் ஓ. பன்னீர்செல்வம், நேற்று முதல்வருடன் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் முதல்வர் வேட்பாளர் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.