குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள மணி நகரில் கடந்த 1971ஆம் ஆண்டு தமிழ் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு நல்ல நிலையில் இயங்கி வந்தது.
அண்மையில் கொரோனா மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி, அந்தப் பள்ளியை மூடுவதாக அந்த மாநில அரசு அறிவித்திருக்கிறது.
இந்த முடிவால் அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களும் தமிழ்வழியில் கல்வி பயின்றுவரும் மாணவர்களின் பெற்றோரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
குஜராத் அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து, அங்கு வாழும் தமிழ் மக்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
தற்போது, பள்ளிக்கூடம் மூடப்
படுவதைக் கைவிடக்கோரி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அக்கடிதத்தில், “குஜராத் அரசின் இந்த முடிவு, இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்ட விதிமுறைகளை மீறுவதாகும். அரசியலமைப்பு 350ஏ பிாிவு, ‘மொழிச் சிறுபான்மையினரின் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கற்பிப்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் போதுமான வசதிகளை வழங்க வேண்டும்’ என தெரிவிக்கிறது.
“எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு குஜராத்தில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார் ஆ.ராசா.