“கொரோனா தடுப்பு மருந்தான ‘கொவிஷீல்டு’ தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படவில்லை,’’ என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் தற்போது 46,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை குணப்படுத்தினால் மற்றவர்களுக்கு இந்த கிருமித் தொற்றைப் பரவாமல் தடுக்க முடியும். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை 5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“இறப்பு விழுக்காடும் 1.6ல் இருந்து 1.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
“கொரோனாவை தடுக்க உலகளவில் முகக்கவசம் மட்டுமே மகத்தான ஆயுதமாக உள்ளது. அனைவரும் கட்டாயம் முகக்கவசத்தைப் பயன்படுத்தினால் தொற்றைக் குறைக்கமுடியும்.
“தமிழகத்தில் ‘கொவிஷீல்டு’ தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவும் இல்லை. அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.