கொரோனா கிருமித்தொற்றால் இறந்தவர்களில் 45% மக்கள் நீரிழிவு நோயாளிகள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் தமிழக, ஆந்திர மாநில அரசுகள் இணைந்து நடத்திய ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.
ஆய்வுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் பி.சந்திர மோகன், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் கே. கோபால் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஒருவருக்கு ஒருவர் மூன்று அடி இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பவர்களும் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களும்தான் தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்றும் மூடப்பட்ட நிலையிலான குளிர்சாதன வசதியுடைய போக்கு வரத்தில் 6 மணிநேரத்துக்கும் மேலாக இருப்பவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு 79% ஆக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர்.
தமிழகம், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் 5 லட்சத்து 75 ஆயிரத்து 71 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. அவர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 84 ஆயிரத்து 965 பேரிடம் தொற்று பரவல் முறை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வறிக்கை விவரம்: “ஒரே வயதுடையவர்களால் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.
“இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களில் 40 முதல் 69 வயதுடையவர்களே அதிகம்.
“கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைவோரின் எண்ணிக்கை 5 முதல் 17 வயது வரை 0.05% ஆகவும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் உயிரிழப்பு 16.6% ஆகவும் உள்ளது.
“கொரோனாவால் இறந்தவர்களில் 63% பேர் குறைந்தபட்சம் வேறு ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 36% பேர் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். கிருமி பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 45% பேர் நீரிழிவு நோயாளிகள்.
“இந்தியாவில் கொரோனா மரணங்கள் 50 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம்தான் அதிகம் நேர்ந்துள்ளது,” எனத் தெரிய வந்துள்ளது.