தமிழகத்தை ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்சினை இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இருவரும் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பேச்சு எழுந்தபோது பன்னீர்செல்வம் தரப்பினர் முதலில் பொதுக்குழுவில் அறிவித்த வழிகாட்டுதல் குழுவை அமைத்துவிட்டு முதல்வர் வேட்பாளர் குறித்துப் பேசலாம் என்றனர்.
இதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து பன்னீர் செல்வம், பழனி சாமி இருவருமே தனித்தனியாக தங்கள் கருத்துகளை நிர்வாகிகள் முன்பு வைத்தனர். இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் போனதால் செயற்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அக்டோபர் 7ஆம் தேதி(இன்று) அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்தது.
இதையடுத்து பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்று அங்கு அவருடைய பண்ணை வீட்டில் மூன்று நாள்கள் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதற்கிைடயே இரு தலைவர் களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தீர்த்து வைக்க அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் களத்தில் இறங்கினர்.
முதல்வரை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம், மூத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பன்னீர்செல்வத்திடம் ஏற்கெனவே ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி யிருந்தார். அதனைத் தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது பன்னீர்செல்வம், “முதல்வர் வேட்பாளர் குறித்த பேச்சு இப்போது தேவையா? முதலில் வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும். முதல்வர் வேட்பாளர் போட்டியில் நான் இருக்கிறேனா, இல்லையா? என்பது இப்போது பிரச்சினை அல்ல. அது தேர்தல் முடிந்த பிறகு பேசிக்கொள்ள வேண்டிய பிரச்சினை,” என்று சொல்லியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து முனுசாமி, முதல்வரிடம் பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு குறித்துப் பேசியிருக்கிறார். இதன் பிறகு சில பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அக்டோபர் 7ஆம் தேதி (இன்று) அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அமைக்க ஒப்புதல் அளிக்கலாம்.
அதேபோல் “முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பன்னீர்செல்வம் எனக்கு ஆதரவாக இருக்கவேண்டும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்ல, பன்னீர் தரப்பிலும் இதற்கு எதிர்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் வழிகாட்டுதல் குழுவும் முதல்வர் வேட்பாளரும் ஒரே நேரத்தில் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.