அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான பிரபு தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவரிடமிருந்து மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் பெண்ணின் தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்து உள்ளாா்.
தியாகதுருகம் கிராம நிர்வாக அதிகாரியான சுவாமிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது மகள் சவுந்தா்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் பிரபு ஆசைவாா்த்தைகள் கூறி கடத்தியுள்ளாா். இதுதொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாா் கொடுத்ததால் எனக்கு மிரட்டல் வருகிறது. எனவே மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ பிரபு, வயது 36, தான் காதலித்து வந்த எஸ். சவுந்தர் யாவை, வயது 19, திருமணம் செய்துகொண்டார்.
இதை கேள்வியுற்று எம்எல்ஏ வீட்டுக்கு வந்த பெண்ணின் தந்தை தன்னைத் தானே தீயிட்டுக் கொள்ள முயற்சி செய்தார். எம்எல்ஏ பிரபு தனது மகளின் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“நாங்கள் பிராமணர்கள். எங்கள் வீட்டில் 14 ஆண்டுகளாக பிரபு வளர்ந்து வந்தார். அவரை எனது மகனாகவே கருதினேன். ஆனால் அவர் நம்பிக்கை மோசடி செய்து விட்டார். எனது மகள் மனதளவில் திருமணத்துக்கு தயாராகவில்லை,” என்றும் அவர் கூறினார். ஆனால் அவருக்கு எந்தவித மிரட்டலும் விடுக்கவில்லை என்று கூறியுள்ள பிரபு, சவுந்தர்யாவை காதலித்து அவரது சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.