பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக இப்போதைய முதல்வர்
கே.பழனிசாமி இன்று அறிவிக்கப்பட்டார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, அதிமுகவை வழி
நடத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி,” என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதன் மூலம் கடந்த சில வாரங் களாக அதிமுகவுக்குள் நிலவி வந்த பதவி மோக பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பழனிசாமிதான் அடுத்த ஆண்டும் முதல்வர் என்ற அறிவிப்பு வெளியானதும் தமிழ்நாடு முழுவதும் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் ஏழு மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலின் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் அண்மைக் காலமாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் தலைமையிலான சமாதானக் குழுவினர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 3.30 மணி வரை நீடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் வேட்பாளர் என போட்டிக்குழுவினர் ஏற்றுக்கொண்டதால் மகிழ்வுற்ற பழனிசாமி உடனடியாக முன்னாள் முதல்வர் கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினை விடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தி வழிபட்டார். இதுநாள் வரை முரண்டு பிடித்த பன்னீர் செல்வமும் அவருடன் சென்றார்.
வழிகாட்டுக் குழுவில் உள்ள 11 பேரில் ஆறு பேர் பழனிசாமி ஆதரவாளர்கள் என்றும் ஐவர் பன்னீர்செல்வம் தரப்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.