காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கென தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது தென்காசி மக்களை ஆச்சரியப்படவும் பாராட்டவும் வைத்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் காவல் நிலையங்கள் மீதான குழந்தைகளின் அச்ச உணர்வு குறையும் என்கிறார் தென்காசி காவல் கண்காணிப்பாளர் சுகுணா.
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்தான் குழந்தைகளுக்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“இப்போதெல்லாம் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து பெண்களும் தைரியமாகப் புகார் அளிக்கின்றனர். அச்சமயம் அவர்களுடன் வரும் குழந்தைகள் காவல் நிலையத்தைக் கண்டு மிரண்டு போகிறார்கள்.
“எனவேதான் குழந்தைகள் இயல்பாக இருப்பதை உறுதி செய்ய காவல் நிலைய வளாகத்துக்குள்ளேயே விளையாட்டு அறையை உருவாக்கி, விளையாட்டுப் பொருள்களை வைத்துள்ளோம்,” என்கிறார்கள் தென்காசி போலிசார்.