சென்னை ஆவடியிலிருந்து, பூந்தமல்லிக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேர்நுதை ஓட்டுநர் திடீரென ‘பிரேக்’ அடித்து நிறுத்தியதில் நிலைகுலைந்த நடத்துநர் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு, பேருந்தின் முன்னால் போய் விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நடிகர் வடிவேலு நடித்த திரைப்பட காட்சி ஒன்றை இது நினைவுபடுத்தலாம்.
நடத்துநர் மீது ஓட்டுநருக்கு அப்படி என்ன கோபம் எனத் தோன்றுகிறதா?
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது குழந்தை ஒன்று குறுக்கே வந்ததால், குழந்தை மீது வாகனம் மோதாமல் இருப்பதை உறுதி செய்ய ஓட்டுநர் திடீரென ‘பிரேக்’ போடவேண்டியதாயிற்று.
பேருந்தில் இருந்த அனைவரும் நிலைதடுமாறினர். பேருந்தின் முன்பகுதியில் சீட்டுகளை வழங்கிக்கொண்டிருந்த நடத்துநர், நிலைகொள்ள முடியாத நிலையில், ஆதரவுக்குப் பிடிக்க கம்பியும் சிக்காததால் முன்புறமிருந்த கண்னாடியின்மீது மோதினார்.
மோதிய வேகத்தில் கண்ணாடி உடைந்தது.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகளும் ஓட்டுநரும் கீழே இறங்கிச் சென்று நடத்துநரை மீட்டு முதலுதவி செய்தனர்.