சென்னையில் 70 இடங்களில் கிருமித்தொற்று அதிகரிப்பு

சென்னையில் 70 இடங்களில் கிருமித்தொற்று அதிகரிப்பு

2 mins read
bc2459d9-4d65-4b4f-97e2-e47036790638
-

சென்னை: சென்னையில் தீவிர கிருமிப் பரவல் காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளன.

இதையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் வேகமாக சாலைகளை மூடி வருகின்றனர்.

தற்போது ஒரு தெருவில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகள் அந்தத் தெருவை மூடி விடுகின்றனர். அவ்வாறு இம்மாதம் 6ஆம் தேதி சென்னையில் மொத்தம் 42 தெருக்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

இது குறித்து விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் 4 தெருக்களும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 தெருக்களும் ராயபுரம் மண்டலத்தில் 2 தெருக்களும் திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 தெருக்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

"அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 தெருக்களுக்கும் அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 தெருக்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 5 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 4 தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 தெருக்கள், வளசரவாக்கத்தில் ஒரு தெரு என மொத்தம் 70 தெருக்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி குறிப்பிட்டது.

சென்னையில் கிருமித்தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டன. அப்போது ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்து கடந்த மாதம் 10க்கும் குறைவான பகுதிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் வாகனப் போக்குவரத்து அதிகரித்து, கிருமிப் பரவலும் சென்னையில் அதிகரித்துள்ளது. முகக்கவசம், பாதுகாப்பான இடைவெளி போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றாததே கிருமிப்பரவலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.