ஊராட்சித் தலைவரை தரையில் அமர வைத்து அவமதித்த சம்பவம் சமூக ஊடகங் களில் பரவியதால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 17ஆம் தேதி சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் பங்கேற்க வந்த தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவரான ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைக்கப்பட்ட படம் சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஊராட்சி செயலர் சிந்துஜா மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்துள்ளார்.
தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்களிடம் ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி நேற்று நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்திரசேகர், தலைமறைவான தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மோகனை தேடி வருகிறோம் என்றும் ஊராட்சி மன்றத் தலைவிக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.