நடிகை குஷ்பு திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த அவர் பிரதமர் மோடி போன்ற தலைவர்தான் நாட்டுக்குத் தேவை என்னும் புரிதலுக்குத் தாம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
டெல்லி செல்வதற்கு முன்பு டுவிட்டரில் பதிவிட்ட அவர் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்றும் பலரும் தன்னிடம் ஒரு மாற்றத்தைப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் பல கோடி பேர் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
“ஒரு கட்சி தமக்கான தலைமையையே கண்டுபிடிக்க முடியாத சூழலில் எப்படி நாட்டைக் காக்க முடியும்? எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஆளும்தரப்பை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவேதான் தனிப்பட்ட நிலைப்பாட்டை மீறி ஒரு கட்சியின் தேசியத் தொடர்பாளராக இருந்தபோது அக்கட்சியின் நிலைப்பாடு குறித்துப் பேசவேண்டி இருந்தது,” என்றார் குஷ்பு.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் அக்கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாக குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த வேளையில் தாம் அக்கட்சியில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ள குஷ்பு, பணம், பெயர், அல்லது புகழுக்காக தாம் காங்கிரசில் இணையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உயர்மட்டத்திலுள்ள, களநிலவரங்களுடன் தொடர்பில்லாத மற்றும் பொதுமக்களால் அங்கீகரிக்கப்படாத சிலர் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் தம்மைப் போன்றவர்களை நசுக்க விரும்புவதாகவும் குஷ்பு தமது கடிதத்தில் சாடியுள்ளார்.
நேற்று குஷ்புவுடன் சேர்ந்து அவரது கணவர் சுந்தர் சி.யும் பாஜகவில் இணைந்தார். தமது அரசியல் பயணத்தின் முதற்கட்டமாக திமுகவில் இணைந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றிய குஷ்பு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவரது விலகலால் காங்கிரசுக்கு எந்தவித இழப்பும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.