திருவண்ணாமலை: உணவுக் குழாயில் 5 ரூபாய் நாணயம் சிக்கிய நிலையில் பெண் குழந்தை ஒன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
மருத்துவர்கள் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகில் உள்ள கொளுந்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த தனுஷ்கா என்ற ஒரு வயது பெண் குழந்தை கடந்த சனிக்கிழமை 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டது. அந்த நாணயம் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய நாணயத்தை அகற்றுவதற்காக டாக்டர்கள் கமலக்கண்ணன், செந்தில்ராஜா, கவுதம், செவிலியர் மணிமேகலை, உதவியாளர்கள் ஜமுனா, ஜானகி ராமன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.
தற்போது அந்தக் குழந்தை நலமுடன் உள்ளது. அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினரை, மருத்துவக் கல்லூரி டீன் உள்பட டாக்டர்கள், குழந்தையின் பெற்றோர், பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.