சேலம்: உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாகக் கூறி, இறுதிச் சடங்குக்காகப் பயன்படுத்தப்படும் குளிரூட்டிப் பெட்டியில் வைத்த சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார், 74. இவருடைய தம்பி சரவணன், 70.
இவர்களின் தங்கை மகள்கள் ஜெயபிரியா, கீதா உட்பட இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது.
இதையொட்டி அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, சரவணன் ஒரு தனியார் ‘காஸ்கட்’ நிறுவனத்திடம் குளிர்பதன பெட்டி வேண்டுமென்று கோரினார்.
பெட்டியைக் கொண்டுவந்தவர்களிடம் மறுநாள் வந்து பெட்டியை எடுத்துச் செல்லுமாறு சரவணன் கூறிவிட்டார். இந்நிலையில், நேற்று குளிர்சாதன பெட்டியை எடுக்க சரவணன் வீட்டிற்கு வந்த ஊழியர்கள், அந்தப் பெட்டிக்குள் பாலசுப்பிரமணிய குமார் நடுங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு, அவரை குளிர் பதன பெட்டியிலிருந்து மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால் சரவணன் அவர்களை தடுத்துவிட்டார். தம் அண்ணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும் அவரது ஆன்மா வெளியேற காத்திருப்பதாகவும் சரவணன் பிடிவாதமாகக் கூறியதையடுத்து, போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நடுங்கிக்கொண்டிருந்த பாலசுப்பிரமணிய குமாரை மீட்ட போலிசார் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை நேற்று நள்ளிரவு வீட்டிற்கு அழைத்து வந்து, இன்று அதிகாலையில் அவரை குளிர்பதன பெட்டியில் வைத்து உள்ளனர். சுமார் 12 மணி நேரம் அவர் குளிர் பதன பெட்டியில் நடுங்கிக்கொண்டு இருந்துள்ளார்,” என்று போலிசார் தெரிவித்தனர்.
சரவணன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.