கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வழங்க, அதிக அளவில் கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்த 8 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யபட்டுள்ளது. மீதமுள்ள 18 மருத்துவமனைகள் அதிகமாகப் பெற்ற கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிருமிப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அத்துடன், ஒரு கட்டண வரம்பையும் அறிவித்தது.
குறைவான அறிகுறிகள் உள்ளோரிடம் ரூ.7,500 வரையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரிடம் ரூ.15000 வரையிலும் மட்டுமே கட்டணம் வசூலிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பல தனியார் மருத்துவமனைகளில் இதைப் பின்பற்றாமல் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இப் புகார்களின் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வின் அடிப்படையில் 26 மருத்துவமனைகள் இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்தது நிரூபிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவச் சேவைகள் இயக்கக அதிகாரிகள் குறிப்பிட்டனர்