கிருமிப் பரவல் காரணமாக ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து ஆம்னி பேருந்துகள் நேற்று முதல் ஓடத் தொடங்கின. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால் அரசு, தனியார் பேருந்துகளின் சேவை அடியோடு நிறுத்தப்பட்டது.
பரவல் வேகம் சற்று தணிந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் வெளி மாவட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம் அரசு விரைவுப் பேருந்துகளும் சேவையைத் தொடங்கின. தற்போது கிருமித்தொற்று பெரிய அச்சுறுத்தலாக இல்லை என்பதால் ஆம்னி பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் ஆம்னி பேருந்துகளில் 50 விழுக்காட்டு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகளில் தூய்மைப்பணி மும்முரமாக நடந்தது. சென்னை கோயம்பேடு வளாகத்தில் உள்ள பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு, சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்தன. பேருந்துகளின் சன்னல் திரை, இருக்கைத் துணிகள் அகற்றப்பட்டன.
ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த தகவலால் பயணிகள் இணையம் மூலம் வேகமாக பயணச்சீட்டை முன்பதிவு செய்யத் தொடங்கினர். பலர் நேரடியாக வந்தும் ஆம்னி பேருந்துகளில் பயணச்சீட்டு வாங்கிச் செல்வதை பார்க்க முடிந்தது.
ஆம்னி பேருந்துகள் நேற்று அதிகாலை 3 மணி முதலே இயங்கத் தொடங்கின.
கொரோனா காரணமாக 6 மாதங்களாக ஓடாமல் இருந்த ஆம்னி பேருந்துகள் புறப்படத் தொடங்கியதால் பேருந்து உரிமையாளர்கள், தொழிலாளர்கள், பயணிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் ஆம்னி பேருந்துகளை ஓட்டுநர்கள் ஓட்டத் தொடங்கினர்.

