சென்னை: மன உறுதி இருந்தால் கொவிட்-19 தொற்றைக்கூட தோற்கடித்துவிடலாம் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த முதிய தம்பதியர் மெய்ப்பித்துள்ளனர்.
சென்னை தி நகரில் வசிக்கும் வைத்தியநாதன் என்ற 100 வயது முதியவரும் அவரின் மனைவியான 92 வயது ஜானகியும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டனர்.
“காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் பாதிப்பு எல்லாம் சேர்ந்துகொண்டு இவர்களைப் பாடாய்ப்படுத்தின.
“ஆனாலும் அசைக்க முடியாத மன உறுதியுடன் இத்தம்பதியர் மருத்துவர்களுக்குக் கட்டுப்பட்டு ஒத்துழைத்தனர். அதன் பலனாக கடைசியில் இவர்களுக்கு வெற்றி கிட்டியது. இந்தத் தம்பதியிடம் கொவிட்-19 கிருமி ஜம்பம் பலிக்க வில்லை. அது தோற்றுவிட்டது.
“இவர்களைவிட்டு ஓடிப்போய்விட்டது. இந்த இருவரும் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பினர்,” என்று மருத்துவமனையின் துறைத் தலைவர் டாக்டர் ஈ தரணிராஜன் தெரிவித்தார்.
திரு வைத்தியநாதன், மருத்துவர்கள் உடன் இருக்க இம்மாதம் 4 ஆம் தேதி தனது 100வது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.