வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், 55, என்ற விவசாயி தன்னுடைய கைபேசி காரணமாக உயிர்தப்பி இருக்கிறார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
மர்மநபர்கள் சுட்டதில் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த உருளைகள் (balls) அந்த விவசாயியின் காலில் ஊமைக்காயத்தை ஏற்படுத்தின. அவரின் கைபேசியில் திடீரென சத்தம் கிளம்பியது, ஆனால் அவற்றை எல்லாம் விவசாயி பெரிதாகக் கருதவில்லை.
அடுத்த நாளன்று வலி தாங்க முடியாமல் போனதால் அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருடைய கால் பகுதியில் துப்பாக்கி உருளையால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
அவரின் கைபேசியைப் பரிசோதித்தபோது அதன் பின்புறத்தில் இரண்டு உருளைகள் பாய்ந்து இருந்தது தெரியவந்தது. அந்தக் கைபேசி இல்லை என்றால் அந்த உருளைகள் அவரின் மார்புப் பகுதியைத் தாக்கி மரணம் ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இம்மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலிஸ் வேட்டை தொடங்கியது.