புதுக்கோட்டை: தமிழகத்தில் 100 நாட்களுக்குப் பின்னர் ஒருவழியாக கொரோனா கிருமி பாதிப்பு 4,000க்கும் குறைவாகப் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இத்தகவலால் சற்றே மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மாநிலத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக ஒவ்வொரு நாளும் 7,000; 6,000; 5,000 என்று பதிவாகி வந்த பாதிப்பு, இப்போது 4,000க்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது,” என்று புதுக்கோட்டையில் செய்தியாளர் களிடம் பேசிய தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இக்கிருமி பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் கிருமிப் பரவலால் 3,914 பேர் பாதிக்கப் பட்டிருந்தது உறுதியானது. இவர்களையும் சேர்த்து இதுவரை மாநிலம் முழுவதும் 687,400 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
“அத்துடன், இந்த தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 637,637 பேர் குணமடைந்துள்ளனர்.
“இத்தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 10,642 ஆக அதிகரித் துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 39,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் சென்னை யில் மட்டும் 1,036 பேருக்கு இந்தக் கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டது.
“இதுவரை சென்னையில் 189,995 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3,520 பேர் உயிர் இழந்து, 1,73,892 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 12,583 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
“அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 41,164 பேர் பாதிக் கப்பட்டு 630 பேர் உயிர் இழந்துள்ளனர். 38,797 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தற்போது 1,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
“மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 39,818 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 523 பேர் உயிரிழந்து, 35,481 பேர் குணம் பெற்றுள்ளனர். தற்போது 3,814 பேர் சிகிச்சையில் உள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.