‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததன் தொடர்பில் பலரும் சமூக ஊடகங்கள் வழியாக தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
தம்மீது அக்கறைகொண்டவர்களின் கருத்துகளை விஜய் சேதுபதி செவிமடுத்ததாகவே தெரிகிறது.
அந்தப் படத்திலிருந்து விலகியிருக்கிறார். இந்தத் தகவல் நேற்று வெளியானது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்யப்போவதாக டுவிட்டரில் ஒருவர் மிரட்டியுள்ளார். அந்தப் பதிவு பலருடைய கண்டனத்தைப் பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் போலிக்கணக்குகளைத் தொடங்கி தனக்கு பிடிக்காதவர்களின் கருத்துகளுக்கு எதிர்க்கருத்து கூறுவதாக நினைத்து ஆபாசமாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் சில புல்லுருவிகள்.
‘ரித்திக்’ என்ற பெயரிலான டுவிட்டர் கணக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரபலங்கள், சமூக ஊடகவாசிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.பி செந்தில்குமார் அந்த நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வது பற்றி பொதுவான ஒரு தளத்தில் சொல்லக்கூடிய இந்த நபர் ஒரு குற்றவாளி என்று பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்.
“விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தோனி ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரது மகளுக்கும் இதுபோன்ற மிரட்டல் டுவிட்டர் பக்கத்தில் விடுக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.