மதுரை: மதுரையில் உள்ள சில உணவகங்களில் ‘ஆம்லெட்’ போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெங்காயம் அதிக விலைக்கு விற்கப்படுவதால் சில ஹோட்டல்களில் ‘ஆம்லெட்’ கிடையாது என்ற அறிவிப்புகளும் வைக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக புரோட்டா கடைகளில் ஒரு ‘ஆம்லெட்’ ரூ.15க்கு விற்கப்படுவது வழக்கம். தற்போது ரூ.20 வரை ஆம்லெட் விற்கப்படுகிறது. இதனால் ‘ஆம்லெட்’ பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ‘ஆம்லெட்’ ரசிகர் ஒருவர், “ஆம்லெட்டுக்கு வெங்காயம் தேவை. எனவே வெங்காயத்தின் விலையேற்றத்தைப் பொறுத்து ‘ஆம்லெட்’ விலையை உயர்த்தலாம். ஆனால் வெங்காயம் இல்லாமல் வெறும் முட்டையில் செய்யப்படும் ‘ஆஃப்பாயில்’ விலையையும் ஏற்றிவிட்டனர். இது பற்றி கேட்டால் முட்டை உணவுகளுக்கு எல்லாம் ஒரே விலை என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர்,” என்று நொந்துகொண்டார்.
மதுரை புரோட்டா கடைகளில் ஆம்லெட், வெங்காய தோசை, வெங்காய ஊத்தப்பம் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் வெங்காயம் இல்லாத சாதா தோசை, இட்லி, பொங்கல் போன்ற உணவு வகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.50க்கும் குறைவாக விற்கப்பட்டது.தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் விளைகிறது.
அண்மையில் இந்த மாநிலங்களில் கடும் மழை பெய்தது. இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விளைச்சல் கடும் சரிவை சந்தித்து உள்ளது. வெங்காய வரத்து குறைவின் காரணமாக சந்தைகளில் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் பெரிய வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.50க்கு அதி கரித்து ரூ.100 வரை விறகப் படுகிறது.
இதற்கிடையே வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்து வருகிறது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்கப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.