சென்னை: ‘நீட்’ தேர்வில் மொத்தம் தேர்ச்சி அடைந்தவர்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் அனுமதி கிடைக்கலாம் என்கிற உண்மையை ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திட முயற்சி செய்தவர்களின் கபட எண்ணத்தை இது தகர்த்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்ததாக ‘இந்து’ இணையத் தளம் குறிப்பிட்டது.
“மொத்தம் 720க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என நிர்ணயித்துள்ளது என்டிஏ எனும் தேசியத் தேர்வு முகமை. ஒருவர் ‘நீட்’டில் தேர்ச்சி பெற்றாலே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்ற கருத்து மாணவ- மாணவியரிடையேயும் பெற்றோரிடையேயும் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. அதன் மூலம் எம்பிபிஎஸ் சேர விண்ணப்பம் போட மட்டுமே அந்த மாணவர் தகுதி பெறுகிறார். அவ்வளவுதான்! அதாவது ‘நீட்’ தேர்ச்சி என்பது கணிதத்தில் 100க்கு 35 எடுத்து “ஜஸ்ட் பாஸ்” ஆவதைப் போல.
“இவ்வாண்டு ‘நீட்’ ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில் பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த எட்டு மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் அனுமதி கிடைக்கலாம் என்கிறது அந்த ஆங்கில நாளேடு.
“அரசுப் பள்ளி மாணவர்களில் ‘நீட்’ தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான்.
“அரசின் பயிற்சி மையங்களில் படித்து 500க்கு மேல் மதிப்பெண் எடுத்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நால்வர், 495 மற்றும் 497 மதிப்பெண் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணாக்கர்கள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என மொத்தம் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது அந்த நாளேடு.
“கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்திவரும் ‘நீட்’டை ரத்து செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்களாக என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.