சென்னை: கொரோனா கிருமித் தொற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கபசுர குடிநீரின் தன்மை குறித்து ஆய்வு செய்ய இரு பெரும் மருத்துவ அமைப்புகள் முன் வந்து உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையும் தேசிய சித்த மருத்துவமனையும் கையெழுத்திட்டு உள்ளன. தமிழகத்தில் கிருமித் தொற்றுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சித்த மருத்துவமும் மக்களிடம் அதிக கவனத்தை பெற்றது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பு மையங்கள் ஏற் படுத்தப்பட்டு கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீர், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவ தானியங்கள் போன்றவற்றை தந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஆயிரக்கணக் கானோர் தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை), கொரோனா தொற்றை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர் தன்மை குறித்த ஆராய்ச்சிக்காக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது பற்றி விளக்கம் அளித்த தேசிய சித்த மருத்துவமனை இயக்குநரான மருத்துவர் ஆர். மீனாகுமாரி, ‘‘கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் கொரோனா தொற்றை எப்படி குணப்படுத்துகிறது. எவ்வளவு நாட்களில் குணப் படுத்துகிறது. கபசுரக் குடிநீரால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் ஆகியன குறித்து ஆய்வு செய்யப்படும். ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் அதிகமான கிருமித்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால்தான், ஆராய்ச்சிக்காக இந்த மருத்துவ மனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.