இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ என்னும் கொரோனா தடுப்பு மருந்து இந்தியா முழுவதும் 17 மையங்களில் 1,600 பேரிடம் சோதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றிலும் சோதனை முயற்சிகள் நடக்கின்றன. சென்னை அரசு பொது மருத்துவமனையில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி 65 தொண்டூழியர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், 65 பேரில் இதுவரை யாருக்கும் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட, ஆரோக்கியமான அனைவரும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு முன்வரலாம் என்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் எப்போதும் போல வேலைக்குச் செல்லலாம் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.