தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுகிடுகிடுவென குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அந்தக் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் தொய்வு இடம்பெறாது என்று அவர்கள் உறுதி கூறினர். அந்த மாநிலத்தில் சனிக்கிழமையன்று 78,896 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 2,886 ஆக இருந்தது.
கடந்த ஜூன் 24க்குப் பிறகு சனிக்கிழமைதான் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை முதல் முதலாக 3,000க்கும் குறைவாக இருந்தது என்றும் மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்தது. அதே வேளையில், குணம் அடைவோர் அதிகரித்து வருகிறார்கள். கொவிட்-9 பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டு இருந்தாலும் தொற்று குறைவது நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நாள்தோறும் புதிதாகக் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை கிடுகிடுவென கூடி 6,000த்தை தொட்டது. என்றாலும் அண்மைய நாட்களில் அது வேகமாகக் குறைந்து வருகிறது. அங்கு சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 706,136 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 663,456 பேர் குணமடைந்துவிட்டனர். 31,787 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். சனிக்கிழமை மாநிலம் முழுவதும் 35 பேர் மரணமடைந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 10,893 பேர் மாண்டுவிட்டனர்.
தமிழகத்தின் மிக முக்கிய அரசு மருத்துவமனையான சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் சனிக்கிழமை யாரும் மரணம் அடையவில்லை என்றும் இது மிகவும் குறிப்பிடத்தக்கது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனை சனிக்கிழமை 26,000 பேருக்கும் அதிகமானோரை பரிசோதித்தது. அவர்களில் 270 பேருக்குத் தொற்று இருந்தது. 290 பேருக்குத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.