புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள கிடாரம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், "மழையின் காரணமாகத் தான் வெங்காயம் விலை உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வு குறித்து அரசு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. இந்த உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக் கடைகளில் வெங்காயத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
இதற்கிடையே, வெங்காயத்தை அதிகளவு கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிர மாநிலத்துக்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனா். இதனால், அடுத்த வாரம் முதல் அதிகளவில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஆரணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் ஷீபா சுவிதா- செந்தில்குமார் தம்பதிகளுக்கு மணமகளின் தோழிகள் வெங்காயத்தைப் பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ள நிலையில் 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் திருமணப் பரிசாக அளித்தனர். படம்: தமிழக ஊடகம்