பெரம்பூர்: "வீட்டில் மந்திரம் செய்து வைத்துள்ளனர். அதை எடுக்காமல் விட்டுவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து," என்று கூறி தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த புகாரின் தொடர்பில், போலிச் சாமியாரின் கூட்டாளிகள் நால்வர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான போலிச் சாமியாரையும் தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், செங் கோட்டை தாலுகா, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரன், 45. வேன் போன்ற வாகனத்தையும் இவர் ஓட்டி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தில் இருந்து புளியங்குடி சென்றுகொண்டிருந்தவர், சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சாமியாரிடம் குறி கேட்டுள்ளார். அப்போது அந்த சாமியாா், "உனக்கு வேண்டாதவர்கள் உனது வீட்டில் மந்திரம் செய்து வைத்துள்ளனர். அதை எடுக்காவிட்டால் உயிர்ப் பலி ஏற்படும். அதை எடுக்க ரூ.2 லட்சத்துடன் இரண்டு கோழிகளுடன் சென்னைக்கு வந்து என்னைப் பார்," என்று கூறியுள்ளார்.
ராஜகுமாரனும் தனது வேனை விற்று அதில் கிடைத்த ரூ.2 லட்சம் பணம், இரு கோழிகளுடன் உறவினர் ஒருவருடன் சென்னை வந்துள்ளார். வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி மருத்துவமனை அருகே போலிச் சாமியார் பணத்தையும் கோழிகளையும் வாங்கிக்கொண்டு, பூசைப் பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு தப்பிவிட்டார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜகுமாரன், வண்ணாரப்பேட்டை போலிசில் புகார் செய்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலி சாமியாரின் கைபேசி எண்களையும் வைத்து நடத்திய விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ், 45, என்பவர் போலிச் சாமியாராக நடித்தது தெரியவந்தது. இவர் இன்னும் பிடிபடவில்லை.