மும்பையில் இருந்து இருசக்கர வாகனத் திலேயே 1,400 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து பாட்டி வீட்டில் வளரும் தங்களது குழந்தைகளைக் காண வந்துள்ளனர் ஒரு தம்பதியர்.
கடந்த ஏழு மாதங்களாகக் காணாதிருந்த பெற்றோரைப் பார்த்த மகிழ்ச்சியில் பிள்ளைகளும் அவர்களைக் கட்டி அணைத்து ஆரத் தழுவிக்கொண்டனர்.
தொடர்ந்து 37 மணி நேரமாக பயணம் செய்து புதுக்கோட்டைக்கு வந்துள்ள தம்பதிகள், “பிள்ளைகளைவிடவும் இந்த சிரமம் எல்லாம் ஒன்றுமில்லை,” என்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.செல்வம், 41. இவரது மனைவி சங்கீதா, 36. மும்பையில் தங்கி பெட்டிக்கடை நடத்தி வரும் இவர்களுக்கு 13 வயதில் மகளும் 6 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில், பள்ளி விடுமுறை காரணமாக பிள்ளைகளை புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள சங்கீதாவின் பெற்றோர் வீட்டில் விட்டிருந்தனர்.
இதையடுத்து, கொரோனா ஊரடங்கினால் பிள்ளைகளைப் பார்க்கமுடியாமல் மும்பையில் தம்பதிகள் தவித்துவந்தனர்.
இந்நிலையில், அவர்களது மகனுக்கு நாளை 28ஆம் தேதி பிறந்தநாளும் வருவதால், இந்த ஆண்டு கொண்டாட முடியாமல் போய்விடுமோ எனவும் பயந்துள்ளனர்.
இதுகுறித்து செல்வம் கூறியபோது, “பிள்ளைகளைக் கொண்டு வந்து விடும்போது ரயிலில் வந்தோம். தற்போது, ரயில் வசதி இல்லாததால் விமானத்தில் வரும் அளவுக்கு என்னிடம் வசதியில்லை. ஆகையால், இருசக்கர வாகனத்தில் 37 மணி நேரமாக வந்துள்ளோம். வண்டி ஓட்டும்போது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எனினும், பிள்ளைகளைவிட அந்த சிரமம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கிருமி பரிசோதனையும் செய்துகொண்டோம்,” என்றார்.
தங்கள் பிள்ளைகளைக் காண இருசக்கர வாகனத்தில் மும்பையில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டைக்கு வந்துசேர்ந்த பெற்றோர்.
படம்: தமிழக ஊடகம்