சேலத்தில் குரங்குகளைப் பிடிக்கும்போது உரிய விதிகளை பின்பற்றாமல் இரும்புக் கம்பியால் அடித்து துன்புறுத்தியது உறுதியானதால் வனச்சரகர் சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
வனச்சரகர் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர் மோகன்குமார் மீது பதிலுக்கு வழக்குப் போட்டு, அவரைக் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தவறு செய்த ஊழியர்கள் மீது புகார் கூறினால், குற்றத்தை சுட்டிக்காட்டியவர் மீதே வழக்கு போட்டு, கைது செய்யும் புதிய உத்தியை சேலம் மாவட்ட வனத் துறை கையில் எடுத்துள்ளதாக மக்கள் விமர்சித்து உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் ஏராள மான குரங்குகள், காட்டுப்பன்றிகள், முயல்கள், காட்டுமாடுகள் வசிக்கின்றன.
அடிவாரம் அருகே உள்ள தேநீர்க் கடைகள், பேக்கரிகள், கல்யாண மண்டபத்துக்குள் கூட்டமாக நுழைந்து இந்தக் குரங்குகள் பெரும் அட்டகாசம் செய்வதாகவும் புகார்கள் கிளம்பின.
இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் குரங்குகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சரவணன் குரங்குகளை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மோகன்குமார், 44, சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரிய சாமியிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, வனச்சரகர் சரவணன் நாமக்கல் சோதனைச்சாவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார். இதற்கிடையே, மலை அடிவாரத்திற்கு வரும் குரங்குகளுக்கு வனச்சட்ட விதிகளை மீறி உணவு வழங்கியதாக மோகன்குமார் கைது செய்யப்பட்டார்.