ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்

ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்

2 mins read
a6161ee5-601c-4acf-b2a2-41a3e5ef940d
தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ். படம்: ஊடகம் -

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலிசார் தாக்கியதால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த வழக்கின் தொடர்பில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தனர்.

வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையின் முழு விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

அதில், ``தந்தை, மகன் இருவருமே பொய்யான குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவர் மீதும் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலால் இருவரின் உடலில், பல இடங்களில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"மாலை 7.45 முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை இடைவெளி விட்டு பலமுறை தந்தையும் மகனும் மிகவும் மோசமாக தாக்கப்பட்டனர்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தக்கறை படிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிந்திய ரத்தத்தைக் காயம்பட்ட தந்தை, மகன் இருவரையுமே அவர்களது உள்ளாடைகளைக் கொண்டு துடைக்கச் சொல்லி போலிசார் துன்புறுத்தியுள்ளனர்.

இந்த ரத்த மாதிரிகள் ஜெயராஜின் மனைவி செல்வராணியின் மரபணுவுடனும் பொருந்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்தில் ரத்தக் கறைகளின் தடயங்களை குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் அழிக்க முயன்றுள்ளனர்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வினிலா, இருவரையும் உடல் பரிசோதனை செய்தபோது, இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமின்றி, சிறையில் அடைக்க இவர்கள் தகுதியானவர்கள் என தகுதிச் சான்றும் கொடுத்துள்ளார்.

தந்தை, மகன் இருவரையும் சிறையில் அடைத்த போது சிறைக்காவலர்கள், சிறை மருத்துவர் ஆகியோரின் ஆவணங்களில் இவர்களின் உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளின் விசாரணை, ஆவணங்களின் மூலம் குற்றம்சாட்டப்பட்ட சாத்தன்குளம் காவல் நிலைய காவலர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன," என குறிப்பிடப்பட்டுள்ளது.