சென்னை ராயப்பேட்டையில் திங்களன்று நள்ளிரவு நேரத்தில் பழைய ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று சீட்டுக்கட்டு போல சடசடவென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
பயங்கர சத்தத்துடன் கட்டடம் இடிந்து விழுந்ததைக் கண்டு அப் பகுதி மக்கள் அதிர்ந்து போனார்கள்.
சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரிக்கு எதிரே பழைய ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இருந்தது.
இந்தக் கட்டடத்தை காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஆருணின் மகள் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பழைய கட்ட டத்தை இடித்துவிட்டு புதுக் கட்டடம் கட்டுவதற்காக இக்கட்டடத்தில் வசித்து வந்தவர்களைக் காலி செய்யும்படி கூறியுள்ளனர்.
ஆனால், கட்டடத்தில் வசித்த வர்கள் வீட்டைக் காலி செய்வதற்கு நஷ்ட ஈடு தரும்படி கேட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கட்டடம் வாங்கியவர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நஷ்டஈட்டை பெற்றுக்கொண்டு, அங்கு வசித்து வந்த 13 குடும்பத்தில் 12 குடும்பத்தினர் காலி செய்துகொண்டு சென்றுவிட்டனர்.
ஆனால், ரெஜினா பேகம் என்பவர் மட்டும் வீட்டைக் காலி செய்ய முடியாது என்று கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எஸ்பிளனேட், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகச் சென்னையில் பெய்துவரும் மழையின் காரணமாகவே இந்தக் கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கட்டடத்தின் மேற்பகுதி யில் கைபேசி கோபுரங்கள் இருந்த தாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்டடக் காவலாளியும் குழந்தையுடன் இருந்த பெண்ணும் விபத்து நடந்த சமயத்தில் அந்தக் கட்டடத்தில் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சரக்கு வாகனங்கள், கார்கள் நொறுங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரனின் உத்தரவின்படி, மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.