அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்.
கமலாவின் தாயான ஷ்யாமளா, சென்னையைச் சேர்ந்தவர். ஷ்யாமளாவின் தந்தை கோபாலனின் பூர்வீகம் தமிழகத்தின் துளசேந்திரபுரம்.
வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, துளசேந்திரபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலாவுக்கு ஆதரவாக பெரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
ஊருக்குள்ளே மேலும் பல பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில் புன்னகை சிந்தும் கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் பின்புலத்துடன் காணப்படுகிறார்.
கமலாவின் தாயான ஷ்யாமளா கோபாலன் சென்னையிலிருந்து மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கருப்பின ஆடவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள்தான் கமலா ஹாரிஸ்.
தமக்கு 5 வயதாக இருந்தபோது சென்னைக்கு வந்திருந்தார் எனவும் அவருடைய தாத்தாவுடன் கடற்கரையில் உலவியதாகவும் குறிப்பிட்டிருந்தார் கமலா.
திருவாட்டி கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது அவரது பெயரில் துளசேந்திரபுரத்தில் உள்ள கோயிலுக்கு ரூ.5,000 நன்கொடை அளித்தது கோயில் கல்வெட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள அதே நாளில், துளசேந்திரபுரத்தில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.