ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டதைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்கள் கிராமத்தில் இனியும் எந்த ஒரு குற்றச் சம்பவமும் நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதற்காக அவர்கள், தங்கள் கிராமம் முழுவதும் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தி 24 மணி நேரமும் காவல் காத்து வருகின்றனர்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காவல்துறையை மட்டுமே நம்பி இருந்த கொம்பூதி கிராம மக்கள், இளைஞர்கள் பொருத்தியுள்ள இந்தக் கண்காணிப்புக் கருவிகளால் தாங்கள் பாதுகாப்பாகவும் பெரும் நிம்மதியுடனும் உணர்வதாகக் கூறியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொம்பூதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதத்திற்கு முன்பு இந்த கிராமத்திற்கும் பக்கத்து கிராமத்திற்கும் இடையே மோதல் உருவானது.
இதையடுத்து, இங்குள்ள கோயில் உண்டியல் பணம் ரூ.60,000 கொள்ளை போனது.
இந்தச் செய்தியைக் கேட்டு கவலையடைந்த வெளிநாடு வாழ் கொம்பூதி கிராம இளைஞர்கள் குற்றங்களைத் தடுக்க எழுவர் கொண்ட குழுவை அமைத்தனர்.
இந்தக் குழுவினர், 24 மணிநேரமும் இயங்கும் 24 கண்காணிப்பு புகைப்படக் கருவிகளைக் கிராமம் முழுவதும் பொருத்தினர்.
மின்சாரம் இல்லாத நேரத்திலும் கண்காணிக்கும் வகையில் ஆறு மின் சேமிப்பு கலம்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்துக்குமான மூன்றரை லட்ச ரூபாய் செலவை வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனால் கிராமத்தின் எந்தவொரு பகுதியில் குற்றச்செயல்கள் நடந்தாலும் அது கருவியில் பதிவாகி வருவதாகவும் இளைஞர்களின் இந்தப் பாதுகாப்பு உத்தி பாராட்டுக்குரியது எனவும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரும் அவ்வூர் மக்களும் வெளிநாடு வாழ் இளைஞர்களை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.