ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்றும் அவர் வந்தால்கூட எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (படம்) தெரிவித்துள்ளார்.
“அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசனைவிட நான் மூத்தவன்.புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினி வை வைத்து தமிழகத்தில் மோசமான ஆட்டம் நடக்கிறது. அரசியலில் ரஜினியை இறக்கி விடுபவர்களே அவரை இழிவாகப் பேசுவார்கள். ரஜினிக்கு ஓய்வு தேவை,” என்று சீமான் கூறியுள்ளார்.
ரஜினி வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஏற்கெனவே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால் இப்போது கட்சி துவங்க இயலவில்லை,” என ரஜினி கூறியதாக குறிப்பிடப்பட்டது.
ஆனால், அதனை தாம் எழுதவில்லை என்று கூறிய ரஜினி, அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தமது உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் தமக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா, கொரோனா பரவல் காலத்தில் தமது தம்பியின் (ரஜினியின்) உடல்நலனே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
“அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார். ஆனால் கொரோனா கிருமிப் பரவல் காரணமாக கட்சி பெயர், கொடி போன்றவற்றை அறிவிப்பது தள்ளிப்போனது. இல்லையென்றால் அவர் கண்டிப்பாக அறிவித்திருப்பார். ரஜினியின் உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் இருப்பது அவசியம். அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் தெரிய வரும்,” என்று அவர் புதிய தலைமுறை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.