நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதன் முன்பகுதி இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கட்டடத்தின் நுழைவாயில் முகப்பு அமைக்க கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முகப்பில் இருந்த தூணும் முன்பகுதியும் இடிந்து சேதமுற்றதாகவும் இதில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.
விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “வெல்டிங் பணிகள் விட்டுப்போனதால் அதிகாரிகளே அப்பகுதியை இடித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,” என்றார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கூறுகையில், “கான்கிரீட் தளத்துக்கு முட்டு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்புகள் சரியான முறையில் வைக்கப்படவில்லை. இதனால் பொறியாளர்கள் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனால்தான் அது இடிந்து விழுந்தது. வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை,” என்றார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும்போதே உடைந்து போயி ருக்கிறது. நீங்களும் இப்படித்தான் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா,” என்று புறநானூறு வரிகளை மேற்கோள் காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.