கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்ட தமிழக வேளாண் அமைச்சர் இரா. துரைக் கண்ணு, 72 (படம்), நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை காவேரி மருத்துவமனை, "அமைச்சர் துரைக்கண்ணு 90% நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து, உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் துணையுடன் அவருக்குச் சிகிச்சையளிக்கப் பட்டு வந்தது. அவரது நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது," என்று தெரிவித்தது.
தஞ்சை மாவட்டம், ராஜகிரி எனும் ஊரில் பிறந்த இவர், 2006, 2011, 2016 என மூன்று முறை தொடர்ந்து பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.
ஜெ.அன்பழகன் (திமுக), எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) ஆகியோரைத் தொடர்ந்து கொரோனாவிற்குப் பலியான 3வது மக்கள் பிரதிநிதி இவர். இதனிடையே, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜ், பட்டுக் கோட்டை எம்எல்ஏ சேகர், மூத்த தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் வேளாண் அமைச்சர் பதவிக்குக் காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

