கோவை: வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் வெங்காயத்தின் விலை குறையும் என்று கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கணித்துக் கூறியுள்ளது.
"புதிய வெங்காயப் பயிரின் அறுவடைக் காலமாகிய ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் வெங்காய விலை குறையும்," என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
கடந்த இரு வாரங்களுக்குள் வெங்காயத்தின் விலை அதிகம் உயர்ந்து மக்களைப் பெரிதும் பாதித்தது. தமிழக அரசின் சார்பில் பசுமை பண்ணைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்கப்பட்டது. ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே தரப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போதும் ரூ.100 ஆக உச்சத்தில் உள்ளதால் உணவகம் நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த விைல யேற்றத்தை சமாளிக்க, வெங்காயத்துக்கு பதிலாக முட்டைக்கோசையும் வெள்ளரிக்காய்களையும் உணவகத்தினர் பயன்படுத்தி வருவதாக மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் கூறியுள்ளார்.
"குறிப்பாக, ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் உணவின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"ஆனால், பொது முடக்கத்துக்கு பிறகு இப்போதுதான் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.
"இந்நிலையில், விலையேற்றம் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் என்பதால் மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றுகூடி விலையை ஏற்றக்கூடாது என்று முடிவெடுத்துள்ளனர்.
"அத்துடன், வெங்காயத்தை 50%க்கு மேல் குறைத்து, அதற்கு ஈடாக முட்டைக்கோஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"அசைவ உணவிற்கு தயிர் பச்சடி அவசியம் என்பதால், வெங்காயத்திற்குப் பதிலாக வெள்ளரிக்காய்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், வெங்காயம் தரக்கூடிய ருசியை முட்டைகோஸ் தரவில்லை என்றும் சில வாடிக்கையாளர்கள் குறை கூறிச் செல்கின்றனர்," என்று சொல்லி உள்ளார் டெம்பிள் சிட்டி குமார்.
சுவையான உணவுகளை வழங்க வெங்காயம் அவசியம் எனினும், வேறு வழியின்றி முட்டைக்கோஸ், வெள்ளரிக்காயை பயன்படுத்தும் முடிவை எடுத்துள்ளோம்.
மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள்
சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார்

