நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளான நேற்று ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான கமல் நேற்று தனது 66வது (நவம்பர் 7) பிறந்த நாளைக் கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நேற்று காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கட்சித்
தொண்டர்களும் சென்னை எல்டாம்ஸ் ரோடு முனையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பு திரண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு பெருங்கூட்டம் கூடியது.
திறந்த வேனில் நின்றபடி ரசிகர்களையும் தொண்டர்களையும் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவரை அனைவரும் வாழ்த்தினர். தொண்டர்கள், ‘வருங்கால முதல்வரே’ என்று முழக்கமிட்டனர்.
அனைவரின் வாழ்த்துகளையும் கமல்ஹாசன் கைகூப்பி ஏற்றுக் கொண்டார். ‘கமலின் வீட்டு முன்பு தலை நிமிரட்டும் தமிழகம்’ என்ற வாசகத்துடன் பெரிய பதாகை வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“என் நேசத்துக்குரியவர்களே! துணிந்தபின் நான் தயங்குவதில்லை. தடைகள் கண்டு மயங்கவில்லை. எதிர்ப்புகள் கண்டு கலங்குவதில்லை. மக்கள் நலனே என் வாழ்க்கையின் நோக்கு. தமிழகத்தை சீரமைப்பதே நம் இலக்கு. நற்பணி என்ற சொல்லையே நாற்பது ஆண்டுகளுக்கு முன்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தவன் நான். எனது பிறந்தநாளை நற்பணி தினமாக நினைத்து மக்களுக்கு நற்காரியங்களை செய்யுங்கள்.
கொரோனாவால் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தெருக் கோடிக்கு சென்றால் கோடி பிரச்னைகள் காத்துக் கிடக்கின்றன. தேடித் தீர்ப்போம் வா நற்பணி செய்ய, தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை சீரமைக்கும் முன்னோட்டமாக நமது காரியங்கள் எனது பிறந்தநாளில் துவங்கட்டும்,” என்று அறிக்கையில் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“முத்தமிழறிஞர் கலைஞரால் ‘கலைஞானி’ என்று போற்றப்பட்ட -எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலமுடன் நீண்ட காலம் வாழ்க!,” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, நவீன தமிழ் கலாசாரத்திற்கு பங்களித்த வலுவான குரல் என்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.