சென்னை: வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.
திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் மெய்நிகர் காட்சி வாயிலாக நடந்தது. அப்போது, வரும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து தங்களுடைய கட்சியின் முடிவை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், திமுக-மார்க்சிஸ்ட் கூட்டணி வரும் சட்டசபை தேர்தலுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றியிருப்பதை ரத்து செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இம்மாதம் 26ஆம் தேதி பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்" என்று ஜி. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு உளளார்.

