சோளப் பயிர்களைக் கூட்டம் கூட்டமாக அழித்துத் தாக்கும் புழுக்களை ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து அழிப்பதற்கு ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்ெகாண்டு வருகின்றனர்.
பயிர்கள் முழுவதுமாக புழுக்கள் சூழ்ந்துள்ளதால் அவற்றை மாடுகளுக்குத் தீவனமாகப் போடமுடியாத சூழலும் உள்ளது. மக்காச்சோள வயல்களை முற்றிலும் அழிப்பது, தீயிட்டு எரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்களின்மீது ஆளில்லா விமானத்தைப் பறக்கவிட்டு, அதன்மூலம் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து புழுக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கமுடியுமா என்பதை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து பூச்சியியல் துறை பேராசிரியர்கள் கூறியபோது, "மக்காச்சோளத்தை படை படையாக புழுக்கள் தாக்குவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் பணியில் புதிய தொழில்நுட்பமான ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம்.
"இதன்மூலம் புழுக்களை அழித்து கட்டுக்குள் கொண்டுவரும் திறன், பயிர்களில் எஞ்சியுள்ள நச்சுத் தன்மை, புழுக்களின் இறப்பு விகிதம், நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை போன்றவற்றின் சாதக பாதகங்களையும் கண்டறிய முயன்று வருகிறோம். இந்த ஆராய்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பது இதுவே முதல்முறை,'' என்று கூறியுள்ளனர்.
மக்காச்சோளத்தை அழிக்கும் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த திருவண்ணாமலை வேளாண் கல்லூரி ஆய்வாளர்கள் புதுமுயற்சியில் இறங்கியுள்ளனர். சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பதன் மூலம் பயன் கிடைக்குமா என்பதைக் கண்டறியும் பணியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். படம்: தமிழக ஊடகம்

