அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வாகி உள்ள திரு ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின் ராணி கவுண்டர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர, திரு ஜோ பைடன் புதிய வழிகாட்டுக் குழுவினை அமைத்துள்ளார்.
13 பேர் கொண்ட இக்குழுவின் தலைமைப்பொறுப்பில் 3 பேர் உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவர் செலின் ராணி கவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செலின் ராணி மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க காசநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார் அவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக செலின் ராணி தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

