வேலை கேட்டு மனு அளித்த உடற்குறையுள்ள பெண்ணுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசுப் பணிக்கான ஆணை வழங்கி அசத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தூத்துக்குடி மருத்துவமனையில் நேற்று நவீன கருவியைத் தொடங்கி வைத்தபின் காரில் திரும்பிக்கொண்டிருந்தார் முதல்வர். அப்போது, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி, 20, என்ற உடற்குறையுள்ள பெண் கையில் மனுவுடன் சாலையில் நின்றுகொண்டு இருந்தார்.
இதைக் கண்ட முதல்வர், காரை நிறுத்தி என்ன ஏதுவென்று அப்பெண்ணிடம் விசாரித்தார். அப்போது, தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மாரீஸ்வரி முதல்வரிடம் மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் சுகாதாரத் துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் கணினிப் பிரிவில் மாரீஸ்வரிக்கு வேலை வழங்க உத்தரவிட்டார். உடனடியாகப் பணி ஆணையும் மாரீஸ்வரியிடம் வழங்கப்பட்டது.
'முதல்வன்' பட பாணியில் முதல்வர் பழனிசாமி எடுத்த மின்னல் வேக நடவடிக்கையைக் கண்டு அதிமுகவினர் நெகிழ்ந்துபோனதாகக் கூறப்பட்டது.

