கஜா புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டபோது மச்சுவாடி பகுதியை சேர்ந்த 44 வயது ஆட்டோ ஓட்டுநரான முத்துக்குமாரின் வீடு பெருத்த சேதமடைந்தது.
அந்த வீட்டின் மேற்கூரையில் விளம்பர பதாகைகளால் அமைத்து நான்கு குழந்தைகளுடன் அவரும், அவரது மனைவியும் வசித்து வந்தனர்.
தமது ஆட்டோவை விற்ற அவர், இப்போது வேறு ஒருவரிடம் ஓட்டுநராகப் பணி புரிகிறார்.
கொரோனா ஊரடங்கின்போது வெளியூர்களில் வசித்த அவரது நண்பர்கள் புதுக்கோட்டைக்கு வந்திருந்தனர்.
அவருடன் பள்ளியில் பயின்ற மாணவர்கள் ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்றை உருவாக்கினர்.
முத்துக்குமாரின் நிலையைக் கண்ட அவரது நண்பர்கள், அவருக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க முயற்சி எடுத்தனர். சமூக ஊடகங்களின் வழியாக இந்தத் தகவலை நண்பர் குழுக்களுக்குள் பகிர்ந்தனர்.
முத்துக்குமாருடன் பள்ளியில் படித்த பலர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களும் உதவிக்கரம் நீட்டினர்.
முத்துக்குமாருக்கு ஒரு புதிய வீட்டை அதே இடத்தில் கட்டியதுடன், அந்த புதிய வீட்டை நண்பர்கள் திறந்து வைத்து அதன் சாவியை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தனர்.