இந்து சமயத்தின் சிறப்பியல்புகளைப் பறைசாற்றும் விழா ஒன்றை சிங்கப்பூர் இந்து மையம் ஏற்று நடத்துகிறது. வரும் 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு நடைபெற இருக்கும் விழாவில் 23 நிகழ்வுகள் இடம்பெறும். சமயச் சொற்பொழிவுகள், கலாசார நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள், சமயத்தை மையமாகக் கொண்ட விளையாட்டுகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் ஆகியன இவற்றுள் அடங்கும்.
சிங்கப்பூரில் உள்ள முக்கிய இந்து ஆலயங்களை மெய்நிகர் வழியாக சுற்றிப் பார்ப்பது விழாவின் முக்கிய அம்சம். சைவ உணவின் சிறப்புகள் பற்றி சோனல் நிரஞ்சன், ரேணு சுரேஷ் ஆகிய இரு பெண்களின் கலந்துரையாடலும் விழாவைச் சிறப்பிக்கும்.
இந்துவின் வாழ்க்கையை வாழ்வது என்னும் கருப்பொருளில் இந்து சமயத்தின் முக்கிய அம்சங்களை விளக்கும் ஆன்மிக, கலாசார, சமூக, குடும்ப, சுகாதாரம் முதலிய நிகழ்வுகளோடு கட்டடக்கலையை விவரிக்கும் அம்சமும் இடம்பெறும்.
இந்து சமயம் மீதான ஆழமான புரிதலை சிங்கப்பூரரிடையே ஏற்படுத்துவதும் ஓர் இந்துவின் அன்றாட வாழ்க்கையில் அது பிரதி
பலிக்கும் விதத்தை விளக்குவதும் விழாவின் நோக்கம் என்று சிங்கப்பூர் இந்து மையத்தின் ஆலோசகர் திரு என்.வரபிரசாத் தெரிவித்தார்.
இந்து சமயம் என்பது பெரிய ஆலமரம் போன்றது. பல்வேறு வேர்களையும் கிளைகளையும் கொண்டது அது என்பதால் தவறான புரிதலுக்கும் அங்கு இடமுண்டு. அந்தப் புரிதலைக் களைந்து இந்து சமயத்தின் சிறப்புத் தன்மைகளை சிங்கப்பூரர்கள், இந்துக்கள், இந்துக்கள் அல்லாதோர் ஆகியோரிடம் விளக்குவதும் மாநாட்டின் பணியாக இருக்கும் என்றார் அவர்.
விழாவை வரும் வெள்ளிக்
கிழமை (நவம்பர் 20) இரவு 7 மணிக்கு கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தொடங்கி வைக்கிறார். விழா நிகழ்வுகள் www.facebook.com/hinducentresg, www.youtube.com/hinducentresg ஆகிய சமூக ஊடகத்தளங்களில் நேரலையாக இடம்பெறும். விழா நிகழ்வுகள் பற்றிய விவரங்களை www.sfh.sg இணையத்தளத்தில் காணலாம்.

