மதுரை: கடந்த ஜூன் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜும் அவருடைய மகன் பென்னிக்ஸும் சாத்தான்குளம் போலிசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.
பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலிசார், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 காவலர்களை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப்
பதிவு செய்தனர்.
இதனையடுத்து தற்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலிஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் இறந்ததால் மற்ற ஒன்பது பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும் கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ 2,027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதன்படி இந்த கொலை வழக்கில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட ஆறு போலிசார் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் இதில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், நீதிபதி பாரதிதாசனின் விசாரணை அறிக்கையும் டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர ஜெயராஜ்-பென் னிக்ஸ் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருப்பது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கும் எனத் தெரியவந்துள்ளது.

