சென்னை: சென்னை யானைக்
கவுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணே கொலைகாரர்களை ஏவிவிட்டதாக போலிசார் தெரிவித் துள்ளனர்.
சென்னையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த தலில் சந்த், 74, அவரது மனைவி புஷ்பா பாய், 70, அவர்களின் மகன் ஷீத்தல், 42, ஆகியோர் புதன்கிழமை இரவு அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் யானைக்கவுனி வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படையை போலிஸ் தலைமை அமைத்து தீவிர தேடுதலில் இறங்கியது. அவற்றில் ஒரு தனிப்படையினர் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா (படம்) வசிக்கும் மகாராஷ்டிர மாநிலம் புனே நோக்கிச் சென்றது. போலிசாரின் தீவிர விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேரை மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் கைது செய்தோம். காரில் துரத்திச் சென்று முக்கிய குற்றவாளிகள் கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம்கமல் ஆகியோரை கைது செய்தோம். குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
"சென்னை போலிஸ் வருவதை அறிந்து அவர்கள் புனேவிலிருந்து சோலாப்பூர் தப்பினர். சோலாப்பூரில் இருந்து புனேவுக்கு வாகனத்தில் தப்பிச் செல்லும்போது குற்றவாளிகளை போலிஸ் படை மடக்கிப் பிடித்தது. இல்லற வாழ்க்கையில் ஷீத்தல்-ஜெயமாலா இடையே பிரச்சினை இருந்தது தெரியவந்துள்ளது. மூன்று பேர் கொலை வழக்கின் விசாரணைக்காக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போலிசார் உதவினர். கொலையில் ஜெயமாலாவும் அவரது உறவினர்களும் ஈடுபட்டுள்ளனர். ஷீத்தல் குடும்பத்தினரை திட்டமிட்டு ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்," என்றார்.

